தினமணி 02.11.2009
ஆரணியை எழில்மிகு நகராட்சியாக மாற்றுவோம்
ஆரணி, நவ.1: ஆரணி நகராட்சியை எழில்மிகு நகராட்சியாக மாற்றுவோம் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தினவிழாவில் ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் உறுதி கூறினார்.
ஆரணி நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேறியுள்ளன. காமராஜர் சிலை முதல் அண்ணாசிலை வரை சிமென்ட் சாலை அமைத்து நடைபாதையுடன் கூடிய இரு வழிப்பாதை அமைக்கப்படவுள்ளது.
இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பழக் கடைகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரணி நகராட்சி நுழைவு வாயில்களில் வளைவுகள் அமைக்கவும், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆரணியை எழில்மிகு நகராக மாற்றுவோம் என்றார்.
நகரமன்றத் தலைவர் சாந்திலோகநாதன், தொழிலதிபர் லோகநாதன், துணைத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.