தினமணி 2.11.2009
ஒசூரில் ரூ.30 லட்சத்தில் நவீன நூலகம்
ஒசூர், நவ. 1: ஒசூர் காந்தி சிலை அருகே பழைய பெங்களூர் சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புதிய நவீன நூலகக் கட்டடம் ரூ.30 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டப்படும் என நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏசத்யா கூறினார்.
ஒசூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவையொட்டி நகராட்சி அலுவலகத்தில் தாற்காலிக நூலகத்தைத் தொடங்கிவைத்து, எஸ்.ஏ.சத்யா பேசியது:
தாற்காலிக நூலகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் உள்ளன. இதனை நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் பயன்படுத்துவர்.
ஒசூர் காந்தி சிலை அருகே அமையவுள்ள நவீன நூலகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தினசரி நாளிதழ்கள், அனைத்து மொழிப் புத்தகங்கள் வைக்கப்படும். ஒரே நேரத்தில் சுமார் 300 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் புதிய நூலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நூலகம் இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
நகர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒசூர் நகராட்சி சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய்ஆனந்த், ரமேஷ்பாபு, சீனிவாசன், இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.