தினமணி 3.11.2009
உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி
தஞ்சாவூர், நவ. 2: தஞ்சாவூர் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழிப்புனர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் நகராட்சி சார்பில் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கூட்டு துப்புரவுப் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளை நகர்மன்றத் தலைவர் தேன்மொழி ஜெயபால் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சலீம், நகராட்சி ஆணையர் நடராஜன், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் குருசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணியை, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தொடக்கிவைத்தார். மகாமக குளத்திலிருந்து புறப்பட்டப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்கா அருகே நிறைவடைந்தது.
பேரணிக்கு நகர்மன்ற மூத்த உறுப்பினர் ரா. துரை தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் க. அன்பழகன், நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், முதுநிலை நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.