தினமணி 9.11.2009
நிவாரணப் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட வேண்டும்
காரைக்கால், நவ. 8: மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று புதுவை அமைச்சர் ஏ. நமசிவாயம் கேட்டுக் கொண்டார்.
புதுவை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ. நமசிவாயம் சனிக்கிழமை மாலை காரைக்கால் வந்தார். அவரிடம், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மழையால் பாதிப்பு நிவாரண உதவி மேற்கொள்ள நகராட்சிக்கு ரூ. 1 லட்சமும், கொம்யூன் பஞ்சாயத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் தரப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வெள்ள நீர் வடியச் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும்.
காரைக்காலில் தேங்கி நிற்கும் மழை நீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்பட்டதால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
விவசாயப் பாதிப்புகள் குறித்து தற்போது கணக்கெடுக்க முடியாது. இதற்கான வேலைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும். சாக்கடைகள் அடைப்பட்டு, ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் புகார் கூறப்பட்டுள்ளது.
அந்த இடங்களை கண்டறிந்து உடனடியாக சீர் செய்ய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.