தினமணி 10.11.2009
ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
ராமநாதபுரம், நவ. 9: ராமநாதபுரம் நகரில் நாகநாதபுரம் ஊருணியில் மழைநீர் நிரம்பி நகருக்குள் வராமல் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையை,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர் .
ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து மழை பெய்தால், நாகநாதபுரம் ஊருணி நிரம்பி, சின்னக்கடைத் தெரு, நாகநாதபுரம், பாரதிநகர், புளிக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் வீடுகளை சூழந்துவிடும். இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
எனவே, ராமநாதபுரம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மக்களவை உறுப்பினர் ஜே.கே. ரித்தீஷ் ஆகியோரது ஆலோசனையின்பேரில், நாகநாதபுரம் ஊரணியிலிருந்து வெளியேறும் மழை நீரை நகருக்குள் வராமல் தடுக்க, பெரிய குழாய்கள் பதித்து அதன் வழியாக தண்ணீரை சக்கரக்கோட்டை கால்வாய் வழியாக கடலுக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில், கடந்த ஒரு மாதமாக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தன.
இப்பணி முடிந்து, ஊருணி நீரை குழாய்கள் வழியாக கால்வாய்க்கு திறந்து விடப்படுவதை, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் து. இளங்கோ, வட்டாட்சியர் து. இந்திரஜித், வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், நகராட்சி ஆணையர் கே.வி. பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நடவடிக்கைக்கு பாராட்டை தெரிவித்தனர்.