தினமணி 11.11.2009
மழையால் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு ரூ.1.48 லட்சம் நிவாரண உதவி
ராமநாதபுரம், நவ.10: ராமநாதபுரம் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு ரூ. 1.48லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தமிழக குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் திங்கள்கிழமை வழங்கினார்.
பரமக்குடி அருகே மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி கனமழையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு நிவாரணத்தொகையாக ரூ. 1 லட்சம் உள்பட மொத்தம் 27 பேருக்கு அமைச்சர் சுப.தங்கவேலன் ரூ. 1.48லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்துக்கு 100 மின்மாற்றிகள் அமைக்கவும், பழுதடைந்த பழைய குடிநீர்க்குழாய்களுக்குப் பதிலாக புதிய குழாய்கள் அமைக்க ரூ. 166.05 கோடிக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
மழைக் காலமாக இருப்பதால் தொற்றுநோய் பரவாத வண்ணம் அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும். படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் 9318 பேருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் 2135 கிராமங்கள் பயன்பெற்று வருவதாகவும், கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் 69579 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுப.தங்கவேலன் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கி. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.