தினமணி 11.11.2009
சாந்திமலை அறக்கட்டளை நன்கொடை தி.மலை நகராட்சிக்கு புதிய குடிநீர் லாரி
திருவண்ணாமலை, நவ.10: திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய குடிநீர் லாரியை சாந்திமலை அறக்கட்டளை நன்கொடையாக வழங்கியது.
இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர். செல்வம் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் முன்னிலையில் அறக்கட்டளை மேலாண் இயக்குநர் டாக்டர் வெர்னர் நிக்கல் குடிநீர் லாரியின் பதிவு சான்றிதழை எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டியிடம் வழங்கினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் கூறியது:
ஏற்கெனவே சாந்திமலை அறக்கட்டளை சார்பில் ரூ.8 லட்சம் செலவில் குப்பை வாரும் லாரி வழங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தற்போது குடிநீர் லாரியை வழங்கியுள்ளனர் என்றார்.
திருவண்ணாமலை நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 30 ஆயிரம் வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளை பெறும் கூடை பச்சை நிறத்திலும், மக்காத குப்பைகளை பெறும் கூடை மஞ்சள் நிறத்திலும் என மொத்தம் 60 ஆயிரம் கூடைகள் தேவைப்படுகிறது.
பிளாஸ்டிக் கூடைகளை பெற சாந்திமலை அறக்கட்டளை நிறுவனத்தின் உதவி கோரி நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் அதன் நிர்வாக இயக்குநர் வெர்னர் நிக்கலிடம் மனு அளித்தார். நகர திமுக செயலர் ப.கார்த்திவேல்மாறன், ஆணையர் சேகர், அறக்கட்டளை மேலாளர் மனோகரன் கலந்து கொண்டனர்.