மாலை மலர் 11.11.2009
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டினால்போலீஸ் மூலம் நடவடிக்கை; இன்று முதல் தடை
சென்னை, நவ. 11-
சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், கட்டிடங்களில் இன்று முதல் போஸ்டர் ஒட்ட தடை அமலுக்கு வந்தது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை ஊழியர்கள் அகற்றினார்கள். இதை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையை அழகு படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்ணாசாலை, காமராஜர் சாலையில் போஸ்டர் ஒட்ட தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப் படுகிறது. ஏற்கனவே 10,700 சதுர அடிக்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இன்னும் 42 ஆயிரம் சதுர அடிக்கு ஓவியங்கள் வரையப்பட உள்ளன.
ராஜ்பவன் சுற்றுச்சுவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை, மேடவாக்கம் டேங்க் சாலை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி சுவர் உள்பட 2 லட்சம் சதுர அடியில் ஓவியங்கள் வரைய ஏற்பாடுகள் நடக்கிறது.
இன்று முதல் மாநகராட்சி கட்டிடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, சாலையோர பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளி சுவர்கள், கலையரங்கம், சமூதாய கூடங்கள் உள்பட 3464 மாநகராட்சி இடங்களில் போஸ்டர், சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தடையை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர் மா.பா. அன்புதுரை உடனிருந்தனர்.