தினமணி 12.11.2009
மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல்: அமைச்சர் தகவல்
பெங்களூர், நவ. 12: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியல் விரைவில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.
பெங்களூர் பிளேஹள்ளி கழிவுநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டார் அசோக். அப்போது அவரிடம், பெங்களூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குஅசோக் கூறியது: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், ஆனால் மாநில அரசு இன்னும் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதங்களே ஆகியுள்ளன. இந்த 18 மாதத்தில் மாநகராட்சி வார்டுகளின் எல்லைப் பிரிப்பு, வார்டுகளின் எண்ணிக்கையை 198 ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் வார்டுகள் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிட முடியவில்லை. அப்பணியில் அரசு இப்போது தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் வார்டுகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
நகரில் உள்ள பெரிய கழிவு நீர்க் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டி உள்ளனர். அந்த வீடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் பரத்லால் மீனாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அப்பணியில் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ தலையிட மாட்டார்கள். இவ்வாறு தலையிடக் கூடாது என்று எம்எல்ஏக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் கழிவு நீர்க் கால்வாய் சுருங்கி, மழை நேரத்தில் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது என்றார் அவர்.