தினமணி 12.11.2009
முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம்: மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு ஒரு மையம்
ஈரோடு, நவ. 12: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 3 வார்டுகளுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி திருமண மண்டபம், விநாயகர் கோயில் வீதி மாநகராட்சி பள்ளி, காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனி மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருநகர் காலனி பள்ளியில் புகைப்படம் எடுக்கும் பணியை மேயர் குமார் முருகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:
ஒரு மையத்துக்கு 3 வார்டுகள் வீதம் புகைப்படம் எடுக்கப்படும். ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள அனைவரையும் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கவுன்சிலர்கள் அன்பழகன், குணசேகரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.