Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அதிகாரி ஆய்வு

Print PDF

தினமணி 18.11.2009

மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அதிகாரி ஆய்வு

தேனி, நவ.17: தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான சத்தியகோபால் ஆய்வு செய்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வருவாய், கல்வி, சமூகநலம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணி, நுகர்பொருள் வழங்கல், கூட்டுறவு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களிடம் ஆய்வு செய்து, திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தார்.

பின்னர், தேனி ஒன்றியம் ஜங்கால்பட்டியில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ரூ.3.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.1.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, தடுப்பணையில் இருந்து நேரடியாக விளைநிலங்களில் உள்ள கிணறுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லத் தேவையான வசதிகளை ஏற்படுத்த ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, பெரியகுளம் அருகில் உள்ள தாமரைக்குளத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பண்ணை உள்பட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் சத்தியகோபால்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பி.முத்துவீரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, மாவட்ட வன அலுவலர் சீனிவாசரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் மாதவி, முதன்மைக் கல்வி அலுவலர் கே.செல்வக்குமார், சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் தருமராஜ், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் செல்லத்துரை, வேளாண் துறை இணை இயக்குநர் நடராஜன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 18 November 2009 08:38