தினமணி 21.11.2009
சாண எரிவாயு தகன மேடை பணி முடிவடைவது எப்போது?
திண்டுக்கல், நவ. 20: சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மயானத்தில் சடலங்களை நேரடியாக எரியூட்டுவதற்குப் பதிலாக மின்சக்தி, எரிவாயு மூலம் தகனமேடை அமைத்து எரியூட்டும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் நகரில் கோவிந்தாபுரம், ஒத்தக்கண்பாலம் என 2 இடங்களில் மயானங்கள் உள்ளன. இதில் கோவிந்தாபுரம் மயானம் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் மின் மயானமாக மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சடலத்தை எரியூட்டுவதற்கு ஆறேழு ஆயிரங்கள் செலவாகி வந்தன. மின் மயானம் வந்த பின்னர் சடலத்தை எரியூட்டவும், 25 கிலோ மீட்டர் சுற்றளவு வரை சென்று சடலத்தை வாகனத்தில் எடுத்து வந்து எரியூட்டுவதற்காக வசூல் செய்யப்படும் தொகை சுமார் ரூ.1250 மட்டுமே. மின் மயானம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் சடலத்தை எரியூட்டுவதால் ஏற்படும் வாடை குறைந்து இதனைச் சுற்றியுள்ள பகுதியில் சுகாதார சீர்கேடு பாதிப்பு குறைந்துள்ளது.
எனவே, இதனைத் தொடர்ந்து வேடபட்டி சாலை ஒத்தகண்பாலம் அருகே உள்ள சுடுகாட்டில் சாண எரிவாயு மூலம் தகனமேடை கட்டத் திட்டமிடப்பட்டது. திண்டுக்கல் நகராட்சி பகுதி 2 திட்டத்தின் கீழ் 2006-07 ஆம் ஆண்டில் ரூ. 60 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, 28.9.2007 வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி 31.3.2008-ல் திட்டத்தை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரையிலும் சாண எரிவாயு மயானத்திற்காக கட்டடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் 2 குளங்கள் உள்ளன. மழைக் காலத்தில் குளங்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறும் பாதையில் கட்டடம் கட்டப்பட்டு வருவதால், மழைநீர் தேங்கும் இடமாகி விடுகின்றது.
இது இவ்வாறு இருக்க பணிகளில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த 2008 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு ரூ.95 லட்சமாக உயர்ந்து விட்டது. இதில் மாநில அரசு நிதியாக ரூ.20 லட்சமும், திண்டுக்கல் நகராட்சி ரூ.40 லட்சம் நிதியும், நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 30 லட்சம், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் ஆக 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீண்டும் 11.9.2009-ல் பணி உத்தரவு வழங்கப்பட்டும் பணிகள் தொடரவில்லை.
இது குறித்து திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கூறுகையில், நிதி இல்லாமல் நலப் பணிகள் செய்யமுடியாத நிலை இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால், நிதி முழு அளவில் ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடராமல் திண்டுக்கல் நகராட்சி மந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. மயானப் பகுதியில் தாழ்வான இடத்தில் எரிவாயு மயானத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதால், மழைக் காலங்களில் அருகில் உள்ள குளங்களில் இருந்து வரும் மழை நீர் இந்த இடத்திலேயே தேங்கி வருகின்றது. மழை நீர் தேங்குவதால் கட்டடத்தின் உறுதித் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக் குறியே என்றார்.
எரிவாயு மயானப் பணிகள் தாமதமாவது குறித்து திண்டுக்கல் நகராட்சி ஆணையரிடம் கேட்டதை அடுத்து ஆணையர் அர.லெட்சுமி கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் 35 நகராட்சிகளில் ஒரே ஒப்பந்தக்காரர் மூலம் சாண எரிவாயு மயானம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் திண்டுக்கல் மயானத்திற்கான சிவில் பணிகள் எனப்படும் கட்டடம் கட்டும் பணி முடிவடைந்து விட்டது. தகன மேடை அமைப்பதற்கான இயந்திரங்கள் மட்டுமே வர வேண்டும். இயந்திரம் வந்தவுடன் லிங்கேஜ் எனப்படும் இணைப்பு கொடுக்கும் பணி முடிவடைந்த உடன் மயானம் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கி விடும். தற்போது இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
நலப் பணிகளுக்கான நிதி இருந்தும் பணிகளில் தேவையற்ற காலதாமதம் நீடித்து வருவதாகவும், இக் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை திண்டுக்கல் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.