தினமணி 27.11.2009
2015-ல் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்: பெட்ரோலிய இணை அமைச்சர் தகவல்
புது தில்லி, நவ.26: அடுத்த ஆறு ஆண்டுகளில் 200 நகரங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்தார். வியாழக்கிழமை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இந்த பதிலை அளித்தார். இது தொடர்பான துணைக் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
இயற்கை எரிவாயு இணைப்புகளை 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மிகக் குறைந்த அளவிலான இயற்கை எரிவாயு கிடைப்பதால் இதை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க இயலாது. இருப்பினும் அனைத்து நகரங்களிலும் இத்தகைய வசதியை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும் கிராமப்புறங்களுக்கு சிலிண்டரில் அடைக்கப்பட்ட வாயு விநியோகிக்கும் திட்டம் தனியாக மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார்.
தற்போது நகரங்களில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் உரிமையை நகர எரிவாயு விநியோக அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாகும். கெயில் இந்தியா நிறுவனத்தின் கூட்டுடன் இது செயல்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து நகர்ப்பகுதிகளில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் உரிமையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் இத்தகைய விநியோக உரிமைக்கான அங்கீகாரத்தை பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பிஎன்ஜிஆர்பி) அளித்து வருகிறது. பிஎன்ஜிஆர்பி சட்டம் 2006-ன் படி நகர் பகுதிகளில் இயற்கை எரிவாயு இணைப்பை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. அத்துடன் இதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள வழிவகுப்பதாக ஜிதின் பிரசாத் கூறினார்.