தினமணி 30.11.2009
சாலை அமைக்கும் விவகாரம்: ஆவடி நகராட்சி ஆணையருக்கு சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தல்
சென்னை, நவ.29: சென்னை ஆவடி பட்டாபிராம் பகுதியை அடுத்த தண்டறை கிராமத்தில் சாலை அமைப்பது தொடர்பான பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி நகராட்சி ஆணையரை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டாபிராம் அடுத்த தண்டறை கிராமம் கந்தசாமி நகர் டாக்டர் கன்சிராம் தெருவை சேர்ந்தவர் எஸ். ராஜேந்திரன். இவரது வீடு உள்ளிட்ட பட்டா நிலங்களுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலம் கால்வாய் என வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கால்வாய் என குறிப்பிடப்பட்ட நிலத்தை தவிர்த்துவிட்டு ராஜேந்திரனின் பட்டா நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
இது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், இங்குள்ள கன்சிராம் தெருவில் சாலை அமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் ஆவடி நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். பட்டா நிலங்கள் உள்ள பகுதியில் சாலை அமைப்பதற்கு பதிலாக அங்கு கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக இப் பகுதி மக்கள் சார்பாக, நகராட்சி நிர்வாகத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு ராஜேந்திரன் மனு அனுப்பினார். இந்த நிலையில், தண்டறை கிராமத்தில் சாலை அமைக்கும் பிரச்னை தொடர்பாக ராஜேந்திரனின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஆவடி நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.