தினமணி 01.12.2009
நகரில் தரமான சாலை: நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
அருப்புக்கோட்டை நவ. 30: அருப்புக்கோட்டை நகரில் நகராட்சி சார்பில் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என, நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அருப்புக்கோட்டை நகராட்சிக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர் பழனிசாமி,ஆணையர் முத்துராசு, பொறியாளர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நாடார் மேலரத வீதியில் இந்த ஆண்டு மட்டும் 3 முறை சாலைகள் போடப்பட்டும், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
எனவே, இந்த முறை தரமான ஒப்பந்ததாரர் மூலம் தரமான சாலை அமைக்கப்பட வேண்டும் என, அதிமுக கவுன்சிலர் சிவசங்கரன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, ரூ. 38 லட்சத்தில் இந்த முறை தரமான சிமென்ட் சாலை அமைக்கப்படும் என, நகராட்சித் தலைவர் பதலளித்தார்.
பின்னர், நகரில் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பல நாள்களாக வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை எனவும், வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதில்லை எனவும் கவுன்சிலர்கள் பலர் பல்வேறு விதமான புகார்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் பதிலளித்தார்.