தினமணி 01.12.2009
நாமக்கல் நகராட்சியை விரிவுபடுத்த நடவடிக்கை
நாமக்கல், நவ. 30: நாமக்கல் நகராட்சியுடன் மேலும் 12 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி எல்லையின் அருகாமையில் உள்ள பகுதிகளை சேர்த்து நகராட்சியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள 27 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என நகர்மன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பிரேரணைகளும் அனுப்பப்பட்டன. இதன் மீது மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் கடந்த 3-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. 27 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும்போது அதன் பரப்பளவு மிகவும் பெரியதாக இருக்கும். அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்துதருவது என்பது கடினமாகும். எனவே, 12 ஊராட்சிகள் மற்றும் சில பகுதிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம். இதற்கு அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களின் கருத்துகளை பெறலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ரெட்டிப்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, நல்லிபாளையம், தும்மங்குறிச்சி, வள்ளிபுரம், தொட்டிபட்டி, பெரியபட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, வீசாணம் மற்றும் நாமக்கல் பகுதி ஆகியவை இணைக்கப்படவுள்ளது.