தினமணி 03.12.2009
பாலங்களை ஆய்வுசெய்த நகர்மன்றத் தலைவர்
திண்டுக்கல், டிச. 2: திண்டுக்கல் நகராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலங்களை நகர்மன்றத் தலைவர் புதன்கிழமை பார்வையிட்டார்.
திண்டுக்கல் வேடபட்டி சாலை ஒத்தக்கண் பாலத்தின் கீழே ஆண்டுதோறும் தண்ணீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்களும் பொது மக்களும் பெரும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே இந்நிலை நீடித்து வருவதை ஒட்டி, தரைசாலையின் உயரத்தை அதிகரித்தும், பாலத்திற்கு கீழே வரும் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன், நகராட்சி ஆணையர் அர.லெட்சுமி, நகராட்சிப் பொறியாளர் எம். ராமசாமி, உதவிப் பொறியாளர் ப. வெற்றிச்செல்வி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் 45ஆவது வார்டில் 2008-09 ஆம் ஆண்டிற்கான பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் 24 கழிப்பறை கொண்ட நவீன கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் திறந்து வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஆ. மார்த்தாண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்