தினமணி 04.12.2009
சாலையில் திரிந்த 50 மாடுகள் நகராட்சி பட்டியில் அடைப்பு
கும்பகோணம், டிச. 3: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 50-க்கும் அதிகமான மாடுகள் பிடிக்கப்பட்டு, நகராட்சிக்குச் சொந்தமான பட்டியில் அடைக்கப்பட்டன.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், போக்குவரத்து பாதிப்படைவதுடன், விபத்துகள் நேரிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 30-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோட்டாட்சியர் செங்குட்டுவன், டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் சுமார் 50 காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், வியாழக்கிழமை கும்பகோணம் நகரச் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 50-க்கும் அதிகமான மாடுகளைப் பிடித்து, பைராகி தோப்பில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான பட்டியில் அடைத்தனர்.