தினமணி 10.12.2009
கழிப்பறை, சைக்கிள், கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
மதுரை, டிச. 8: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டணக் கழிப்பறை, சைக்கிள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டணக் கழிப்பறைகள், சைக்கிள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களைவிட அதிக தொகை வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்த இடங்களில் மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் குறித்து கண்டிப்பாக தகவல் பலகைகள் வைக்கவேண்டும். எவராவது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால் அவர்களின் உரிமம் ரத்துச் செய்யப்படும்.
மேலும் மாநகராட்சி அனுமதி பெற்ற கடைகள் முன்பு லைசென்ஸ்தாரர்கள் பெயர், மாநகராட்சி உத்தரவு வழங்கிய அனுமதி எண் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் வைக்கப்படும் கடைகள் மாநகராட்சியால் அகற்றப்படும்.
வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி உள்ளிட்ட நிலுவையில் உள்ள வரிகளை விரைவில் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் ஆணையர் தலைமையில் வருவாய் வசூல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் எஸ்.சிவராசு, தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.