தினமணி 11.12.2009
சொத்து வரி செலுத்தாத கடைகள் ஜப்தி: மாநகராட்சி அதிரடி
சென்னை, டிச. 10: பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சொத்து வரி நிலுவையை அவர்கள் உடனடியாக செலுத்தியதால், நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு எதிரில் அமைந்துள்ள பேரணாம்பட்டு முஸ்லிம் கல்வி சமுதாயத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த 2 கடைகள், கடந்த 2001}ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தவில்லை. இதனால் சொத்து வரி நிலுவை ரூ. 6 லட்சமானது.
இதுபோல் ஈ.வெ.ரா. சாலையில் அமைந்துள்ள 2 கடைகளுக்கு ரூ. 1.60 லட்சமும், செனடாப் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ. 1.30 லட்சமும் சொத்து வரி நிலுவை இருந்தது.
மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்தும், இந்தக் கடைக்காரர்கள் சொத்து வரி செலுத்த முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உடனடியாக கடைக்காரர்கள் அனைவரும் சொத்து வரி நிலுவையை செலுத்தியதால், அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டனர்.