தினமணி 17.12.2009
சாலை விரிவாக்கம்: முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றம்
திருப்பூர், டிச.16: சாலை விரிவாக்கப் பணிகளுக்காக திருப்பூர் மாநகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியை அடுத்து திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, குமரன் சாலை, மாநகராட்சி சாலை, காமராஜர் சாலைகளின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றப்பட்டன.
அதன்தொடர்ச்சியாக, சாலை ஆக்கிரமிப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், தனியார் நிறுவன பெயர் பலகைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் புதன்கிழமை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் பழைய பஸ்நிலையம் முதல் காமராஜர் சாலை, மாநகராட்சி, பார்க் சாலை என புஷ்பா தியேட்டர் ரவுண்டான வரை உள்ள நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தி லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அவர்களாகவே முன்வந்து அகற்றும்படியும், தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.