தினமலர் 24.12.2009
மீன் கடை அமைக்க அனுமதி
திருப்பூர் : திருப்பூர் அவிநாசி ரோட்டில் 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த மீன் கடைகள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது; புதிய இடத்தில் மீன் கடைகள் அமைக்க,நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர், குமார் நகர் பஸ் ஸ்டாப் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து எஸ்.ஏ.பி., தியேட்டர் வரை மீன் கடை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். சமீபத்தில் ரோட்டை அகலப் படுத்தி, சென்டர் மீடியன் அமைக்கப் பட்டது. ரோட்டை ஒட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, மீன் வியபாரிகள் வேறிடத்தில் கடை வைக்க அனுமதிக்கக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். காந்தி நகர் எதிரே உள்ள 60 ரோட்டில் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
வியாபாரிகள் கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தனர். அவிநாசி ரோட்டையும், பி.என்., ரோட்டையும் இணைக்கும் இந்த ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதால், கடைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது; மீன் கடைகளை அமைக்க நகராட்சிக் குட்பட்ட இடத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி, நகராட்சி தலைவர் மணியிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர். காந்தி நகர் 80 அடி ரோட்டில், வார நாட்களில் மீன் கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.