தினகரன் 30.12.2009
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
கோவை:உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரை மேம்படுத்த ரூ. 113 கோடி மதிப்பில் பணிகள் செய்ய மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதை முன்னிட்டு மாநகரை மேம்படுத்த ரூ.112 கோடியே 84 லட்சத்திற்கு ஒப்புதல் வழங்க மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டன. அதன்படி மாநகராட்சி பொது நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ள பள்ளி கட்டடங்கள், நிர்வாக கட்டடங்கள், மத்திய மற்றும் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தல், புதிய பூங்கா அமைத்தல், புதிய தெரு விளக்கு கம்பம், உயர்மட்ட கோபுர விளக்கு அமைத்தல், மாநாடு மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதியில் குடிநீர் வசதிகள் செய்தல் ஆகியவற்றிற்கு ரூ.23 கோடியே 60 லட்சத்து 75 ஆயிரம் செலவிடப்பட உள்ளன.
அரசின் நிதிஉதவியுடன் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மேம்படுத்தல், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், புதிதாக நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்குதல், பொது கழிப்பிடங்கள் மேம்படுத்தல், பிரதான சாலையில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் இணைப்பு மற்றும் அணுகு சாலைகளை புதுப்பித்தல் ஆகிய பணிக்கு ரூ.33 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரம் செலவிடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து திடல்கள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலைகளில் பாதசாரிகள் நடைபாதை அமைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் கட்டண முறை கழிப்பிடங்களுக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.56 கோடியே 6 லட்சமும் செலவிடப்பட உள்ளது. இத்தீர்மானம் அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.