தினமலர் 31.12.2009
இன்று பெரியசேமூர் நகராட்சி தலைவருக்கான தேர்தல்
ஈரோடு: பெரியசேமூர் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. ஈரோடு அடுத்த பெரியசேமூர் மூன்றாம் நிலை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கம்யூனிஸ்ட் இரண்டு, தி.மு.க., ஒன்பது, அ.தி.மு.க., மூன்று, தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், சுயேச்சை என தலா ஒரு கவுன்சிலர் உள்ளனர். தி.மு.க., உதவியுடன் பெரியசேமூர் நகராட்சி தலைவராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரபாகரன் இருந்தார். மினிட் புத்தகத்தில் தன்னிச்சையாக திருத்தம் செய்வது; வளர்ச்சி திட்டங்களில் அக்கறை காட்டாதது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது கூறப்பட்டன.
பிரபாகரன் மீது நகராட்சி துணைத் தலைவரான தி.மு.க.,வை சேர்ந்த சுப்பு, கவுன்சிலர்கள் சக்திவேல், பூபதி ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தை ஆதரித்து 15 பேர் ஓட்டு போட்டனர். எதிராக மூன்று பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இதனால், நகராட்சி தலைவர் பதவியை பிரபாகரன் இழந்தார். செப்., 22 முதல் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து பிரபாகரன் முழுமையாக விடுவிக்கப்பட்டார். நகராட்சி துணைத்தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த சுப்பு தலைவர் பொறுப்பு பதவி வகித்தார். நகராட்சி தலைவருக்கான தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. தேர்தலில் சுப்பு மட்டுமே போட்டியிடுவதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.