தினமணி 02.01.2010
குளங்களை சீரமைக்க மாநகராட்சிக்கு அனுமதி: முதல்வருக்கு மேயர் நன்றி
கோவை, ஜன.1: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி கொடுத்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு, மேயர் ஆர்.வெங்கடாசலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி: கோவை மாநகராட்சி எல்லையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், முத்தண்ணம் குளம், பெரியகுளம், நரசம்பதி குளம்,
செல்வசிந்தாமணி குளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களை 90 ஆண்டுகளுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் மாநகராட்சி வசம் ஒப்படைத்து சீரமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் இக் குளங்களை புனரமைத்து மழைநீர் சேகரித்தல் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக் குளங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் மேற்கொள்ளப்படும்.இதற்கு அனுமதி அளித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.