தினமலர் 04.01.2010
மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர், மேற்பார்வையாளர்
கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகளில், துப்புரவு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், அதற்காக பணியாளர்களை நியமிக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 416 துப்புரவு பணியாளர்களும் அவர்களை மேற்பார்வை செய்ய 19 மேற்பார்வையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்வர். 20 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளரோடு இவர்களும் சேர்ந்து பணிமேற்கொள்வர். இவர்களுக்கு தனி சீருடை வழங்கப்படும். கைரேகைப்பதிவு மூலம் வருகைப்பதிவு எடுக்கப்படும். ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தப்படி ஊதியம் வழங்குவர். கிழக்கு மண்டலத்திற்கு 88 பணியாளர்களும், ஐந்து மேற்பார்வையாளரும், மேற்கு மண்டலத்திற்கு 130 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளரும், தெற்கு மண்டலத்திற்கு 70 பணியாளர்களும், நான்கு மேற்பார்வையாளரும், வடக்கு மண்டலத்திற்கு 128 பணியாளர்கள், ஆறு மேற்பார்வையாளர் என்று மொத்தம் 416 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.