தினமணி 04.01.2010
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வைப்புத் தொகை, கட்டணத்தை உயர்த்த முடிவு
தூத்துக்குடி, ஜன. 3: தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் இணைப்பு பெற வைப்பு தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படுவதற்கு மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலர் கே.எஸ். அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூ. 68 கோடியில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவடைந்து குழாய் இணைப்பு பெற வீட்டு உபயோகத்திற்கு ரூ. 3000 வைப்புத் தொகையாகவும், மாதாந்திர கட்டணம் ரூ. 60 எனவும், வணிக உபயோகத்திற்கு வைப்புத் தொகை ரூ. 7,500, மாதாந்திர கட்டணம் ரூ. 150, தொழிற்சாலை உபயோகத்திற்கு வைப்புத் தொகை ரூ. 10 ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூ. 200 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன முறைக்கு மாற்றியது என்ற பெயரில் வைப்பு தொகையையும், மாதாந்திர கட்டணத்தையும் உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி 500 சதுர அடிக்கு உள்பட்ட குடியிருப்புக்கு வைப்புத் தொகை ரூ. 4000, மாதாந்திர கட்டணம் ரூ. 75, 500 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக்கு வைப்புத் தொகை ரூ. 5000, மாதாந்திர கட்டணம் ரூ. 90, 1200 முதல் 2400 சதுர அடி வரை வைப்புத் தொகை ரூ. 6000, மாதாந்திர கட்டணம் ரூ 110, 2400 சதுர அடிக்கு மேல் வைப்புத் தொகை ரூ. 7000, மாதாந்திர கட்டணம் ரூ. 130 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கும் வைப்புத் தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நொந்து போய் இருக்கும் மக்களிடம் மாநகராட்சி ஆகி ஓராண்டு ஆன பின்பும் சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத நிலையில், பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு கூடுதல் தொகை வசூலிப்பது மக்களை கசக்கி பிழியும் நடவடிக்கையாகும்.
மேலும், இந்த புதிய முறை ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே மாநகராட்சி முடிவைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.