தினமணி 04.01.2010
ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
ஒசூர், ஜன. 3: ஒசூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா (படம்) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
ஒசூரில் இரு தொழிற்பேட்டைகள் அமைந்ததால், டி.வி.எஸ், அசோக் லேலண்ட், டைட்டான் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளும், 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உருவெடுத்தன.
இந்தத் தொழிற்சாலைகள் ஒசூர் நகரைச் சுற்றியுள்ள மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி, பேரண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, சென்னத்தூர், ஆவளப்பள்ளி, பேகேப்பள்ளி ஆகிய ஊராட்சிகளிலும், மத்திகிரி பேரூராட்சியிலும் அமைந்துள்ளன.
தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒசூர் நகரில் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து வருகிறது. ஆனால், தொழிற்சாலை வரி, சேவை வரி ஆகியவற்றை ஊராட்சிகள் வசூலித்து விடுகின்றன. குறிப்பாக சேவை செய்வது நகராட்சி, வருவாய் ஈட்டுவது ஊராட்சிகள். எனவே மேற்கண்ட ஊராட்சிகளையும், மத்திகிரி பேரூராட்சியையும் ஒசூர் நகராட்சியுடன் இணைத்து ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சிகள் எல்லைகள் குறித்த ஆய்வின்போது, முழுமையான அறிக்கை தமிழக அரசுக்கு ஒசூர் நகராட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது