தினமணி 05.01.2010
திருவண்ணாமலையில் ரூ.14.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
திருவணணாமலை, ஜன.4: திருவண்ணாமலையில் ரூ.14.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவணணாமலை நகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 19 மற்றும் 24-வது வார்டுகளில் 520 பேருக்கு இலவச காஸ் அடுப்புகள், 6 ஆயிரம் குடும்பங்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்குதல், இந்தியன் வங்கி சார்பில் 10 மகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடனுதவி, முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 83 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் வேலு பேசியது:
திருவண்ணாமலையில் எம்எல்ஏ கு. பிச்சாண்டியின் முயற்சியால் ரூ.14.5 கோடி செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அனுமதி கடந்த மாதம் கையெழுத்தானது.
புதிய நீதிமன்ற வளாகத்தில் 12 நீதிபதிகள் விசாரணை நடத்தும் வகையில் கட்டடங்கள், தபால் நிலையம், வங்கிகள், சட்ட உதவி ஆலோசனை மையங்கள், கூட்டரங்கம், வழக்கறிஞர்கள் அறை, குடியிருப்புகள் கட்டப்படஉள்ளன.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 53 வகையான நோய்களுக்கு சிகிச்சை தரப்படுகிறது. இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்களின் சிரமத்தைப் போக்க இலவச காஸ் அடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, சொத்துரிமை என பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் என்றார் எ.வ.வேலு. ஆட்சியர் மு.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் வேணுகோபால், கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் இரா. ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகர திமுக செயலர் கார்த்திவேல்மாறன், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.