தினமணி 05.01.2010
தி.மலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்
திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை நகரில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர் (படம்).
ஆன்மிக நகராகவும், மாவட்டத் தலைநகராகவும் உள்ள திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளில் மாடுகள் புகுந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு விளைவித்து வந்தன. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த நகராட்சிக் கூட்டத்தில் மாடுகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் திங்கள்கிழமை இரவு நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் சேகர் மற்றும் ஊழியர்கள் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றினர். மொத்தம் 16 மாடுகள் பிடித்துச் செல்லப்பட்டன.
மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை பிடித்துச் செல்லலாம். தொடர்ந்து சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.