தினமணி 05.01.2010
நாகர்கோவிலில் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன
நாகர்கோவில், ஜன. 4: நாகர்கோவிலில் தெருவில் சுற்றித் திரிந்த 25 நாய்கள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டன. நாகர்கோவிலில் சில வாரங்களாக தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை வளாகம், கோட்டார் பகுதிகளில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனற். இது தொடர்பாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, இந்த நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யவும், அப்புறப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை நாய்களை பிடித்தனர். கோட்டார் கவிமணி பள்ளி வளாகத்தில் 5, ஒழுகினசேரியில் 4, கோட்டார் பகுதியில் 3 என்று மொத்தம் 25 நாய்கள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.