தினமணி 05.01.2010
ரூ.1 கோடியில் கட்டப்படும் மின்தகன மேடை பிப்ரவரியில் செயல்படும்
விழுப்புரம், ஜன. 4: விழுப்புரம் நகராட்சி சார்பில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்தகன மேடை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் செயல்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
÷ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நகராட்சி சார்பில் கே.கே.சாலையில் உள்ள மயானத்தில் ரூ.1 கோடியில் தனியாக மின்தகன மேடை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தற்போது தகன மேடையைச் சுற்றி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
÷இப்பணியை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கூறுகையில், வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு செயல்படத் துவங்கும் என்று தெரிவித்தார். மேலும் இச்சாலையில் அமைக்கப்பட்டுவரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து விழுப்புரம் கிழக்குப் பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலய வாயிலின் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கும்படி தெரிவித்தார்.
÷அவருடன் ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள், ரோட்டரி திட்டக் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.