தினமலர் 06.01.2010
வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு கூடுதல் குடிநீர் வீடுகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் : நடவடிக்கை எடுக்க கமிஷனர் அதிரடி உத்தரவு
திருநெல்வேலி: வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு தண்ணீர் அதிகமாக செல்வதால் கொக்கிரகுளம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர் கோமதிநாதன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக 8வது வார்டு கவுன்சிலர் கோமதிநாதன், துணைமேயர் முத்துராமலிங்கத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தச்சநல்லூர் மண்டலம் 8,9,10வது வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் 8வது வார்டு பகுதியான முருகன்குறிச்சி வாட்டர் டேங்கில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை கொக்கிரகுளத்திற்கு கிடைக்கிறது. கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, நேதாஜி ரோடு, செல்வ விநாயகர் கோயில் தெரு, திருப்பணாழ்வார் தெரு, திருநாளைக்கு போவார் தெரு, பவளத் தெரு, நேதாஜி ரோடு கீழ்பகுதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதில்லை. முருகன்குறிச்சி வாட்டர் டேங்கில் இருந்து கொக்கிரகுளம் பகுதிக்கு வரும் இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள், ஓட்டல்களுக்கு குடிநீர் விநியோகம் முழுவதும் கிடைத்தது போக மீதமுள்ள தண்ணீர் மட்டுமே கொக்கிரகுளம் பகுதிக்கு வந்து சேர்கிறது. முருகன்குறிச்சி வாட்டர் டேங்கின் கொள்ளவு 4 லட்சம். 4 லட்சம் தண்ணர் கொக்கிரகுளம் பகுதிக்கு வரும் போது 50 ஆயிரம் கொள்ளவாக இருக்கிறது. இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் சரியாக இல்லை.
எனவே முருகன்குறிச்சி வாட்டர் டேங்கில் இருந்து தனியாக ஒரு குழாய் அமைத்து, கொக்கிரகுளம் பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு குழாயுடன் இணைக்கவும், அதன் மூலம் நேரடியாக 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எங்கள் பகுதிக்கு கிடைக்கும். முருகன்குறிச்சி வாட்டர் டேங்கிலிருந்து தனியாக ஒரு குழாய் அமைத்து, கொக்கிரகுளம் குடிநீர் இணைப்பு குழாயில் இணைத்து கொடுக்கவேண்டும்.இவ்வாறு கவுன்சிலர் கோமதிநாதன் கூறியுள்ளார்.
இதையடுத்து பாளை., முருகன்குறிச்சி பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை வரை வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் ஆய்வு நடத்தி மாநகராட்சி விதிகளுக்கு முரணாக குடிநீர் இணைப்பு எடுத்துள்ள விபரங்களை சேகரித்து கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.