தினமலர் 06.01.2010
மேலூர் ரயில்வே ஸ்டேஷன் : உழவர்சந்தை அருகே இடமாற்றம் : நிலம் வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ரெடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர்சந்தை அருகே மாற்றுவதற்கு மாநகராட்சிக்குரிய இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று வழங்கலாம் என்று மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் இந்த ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர்சந்தை அருகே கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்கிற கருத்து பரவலாக இருந்ததால் இதற்கு எல்லா தரப்பு மத்தியிலும் ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் உழவர்சந்தை அருகே ரயில்வே ஸ்டேஷன் போக வேண்டும் என்றால் மாநகராட்சிக்குரிய இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. தெற்கு ரயில்வே நிர்வாகமும் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமாக கலெக்டர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது குறித்து கடிதம் எழுதினார்.
மேலூர் ரயில்வே ஸ்டேஷனை உழவர்சந்தை அருகே இடமாற்றம் செய்வதற்கு வேண்டியுள்ள மாநகராட்சிக்குரிய 3 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள திட்ட சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரதான உபயோக சாலையாக உள்ளது. பொது உபயோக இடம், பூங்கா, விளையாடுமிடம் ஆகியவற்றை அந்தந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் கோரியுள்ள 3 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக அரசின் சிறப்பு அனுமதி பெற்று, அரசு விதிகளுக்கு உட்பட்டு ரயில்வே நிர்வாகத்திற்கு இடம் வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசின் முடிவு வந்த பிறகு மேலூர் ரயில்வே ஸ்டேஷன் இடமாறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.