தினமணி 08.01.2010
மாநகராட்சி தேர்தல் நடத்தை விதிகள் ஜன.15 முதல் அமல்
பெங்களூர், ஜன.7: மாநகராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி பிப்ரவரி 21-ம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து புதிதாக இட ஒதுக்கீடு பட்டியலைத் தயார் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு சார்பில் ஓர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் தேர்தலை மூன்று மாதம் தள்ளிவைக்க கோரியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் புதன்கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது. அதன்படி நவம்பர் 30-ம் தேதி அரசு வெளியிட்ட இட ஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தல் அட்டவணையில்தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் கால அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் சிக்கமத் அறிவித்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலாகும் என்று அறிவித்தார். இப்போது மாநகராட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 8-ம் தேதி கடைசிநாளாகும்.
பிப்ரவரி 9-மம்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. போட்டியிலிருந்து விலக விரும்புவோர் வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 11-ம் தேதி கடைசிநாளாகும். பிப்ரவரி 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.