தினமலர் 12.01.2010
ஒளி மறைக்கும் மரக்கிளைகள் அகற்ற நகராட்சி உத்தரவு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த மரங்கள் தற்போது வளர்ந்த நிலையில் தெருவிளக்குகளின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால் வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மரக்கிளைகள் விளக்குகளின் மீது மோதும் போது அடிக்கடி லைட்டுகள் உடைந்து விடுகிறது. இப்பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தனர். தொடர்ந்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆர்டிஓ பாஸ்கரன் கவனத்திற்கு மரக்கிளைகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து பொதுமக்களின் புகாரை கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து ஆர்டிஓ பாஸ்கரன் அனுமதியளித்ததின் பேரில் தெரு லைட்டுகளை மறைத்து வரும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.