தினமலர் 18.01.2010
துப்பரவு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி பணியாளர்கள் நியமனம்
போடி:போடியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி அடிப்படையில் 40 பேரும், கொசுவை ஒழிக்கும் வகையில் மஸ்தூர் பணியாளர்கள் ஏழு பேரையும் நகராட்சி நிர்வாகம் நியமித்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. போடி நகராட்சியில் 80 துப்புரவு பணியாளர்களும், ஐந்து சுகாதார ஆய்வாளர்களும், எட்டு மேற்பார்வையாளர்களும் உள்ளனர். 33 வார்டுகள் அடங்கியுள்ளன.
துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாததினால் குப்பை மற்றும் சாக்கடை அள்ளுவதில் சுணக்கம் ஏற்பட்டன. இதனால் கொசுத்தொல்லைகள் அதிகரித்து சுகாதாரகேடு ஏற்படுத்தி வந்தன.மேலும் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் பலியானதையொட்டி, நகர் பகுதியை சுகாதாரம் காக்கும் வகையில் சாக்கடை மற்றும் குப்பைகள் அள்ளுவதற்கு தினக்கூலி அடிப்படையில் ஆண்கள் சுய உதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொசுவை ஒழிக்கும் வகையில் மலேரியா மஸ்தூர் பணியாளர்கள் ஏழு பேரும் நியமனம் செய்யப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொசு மருந்து அடிக்கும் கையடக்கமான புதிய பாக்கிங் மெஷின்கள் வாங்கப்பட்டு மருந்து அடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நகரில் குப்பைகள் தேக்கம் ஒரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.