தினமலர் 19.01.2010
நெல்லை பஸ்ஸ்டாண்டில் மழைநீர் தேங்குவதைதடுக்க மாநகராட்சி ஊழியர்கள் சர்வே
திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் மழைக் காலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க சர்வே பணி நடந்துவருகிறது.நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமிப்புகள், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பயணிகள், வியாபாரிகள் பாதிப்பு குறித்து கடந்த டிச.31ம் தேதி கலெக்டர் ஜெயராமன், மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமித்திருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வாறுகால்களை சீரமைத்தல், ரோடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி சர்வே பிரிவு ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக பஸ்ஸ்டாண்டில் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சர்வே பணிகள் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.