தினமலர் 20.01.2010
திருப்பூர் மாநகராட்சிக்கு பொறியாளர்கள் நியமனம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் காலியாக இருந்த பொறியாளர் பணியிடத்துக்கு, நகராட்சியில் பணியாற்றிய இளம்நிலை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் 16 பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. பதவி உயர்வு மூலம் இளநிலை பொறியாளர்களை நிரப்ப, தகுதியான பணியாளர்கள் இல்லாததால், டெபுடேஷன் மூலம் நகராட்சிகளில் இருந்து இளநிலை பொறியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, விருத்தாசலம் நகராட்சியில் பணியாற்றிய பழனி; மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சேகர்; மேட்டூர்டேம் நகராட்சியில் இருந்து முனியாண்டி ஆகிய இளநிலை பொறியாளர்கள் டெபுடேஷன் மூலம் திருப்பூர் மாநகராட்சி பொறியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் பழனி பொறுப்பேற்றுள்ளார். மாநகராட்சியில் உள்ள 16 பொறியாளர்கள் பணியிடத்துக்கு, 15 பாறியாளர்கள் பணியில் உள்ளனர். இன்னும் ஒரு பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்நிலையில், டிவிஷன் வாரியாக பொறுப்பு வகித்து வந்த பொறியாளர்களில் பலரும் வேறு டிவிஷன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.