தினமலர் 21.01.2010
அனுமதியின்றி 'பேனர்' வைத்தால் வழக்கு :ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் எச்சரிக்கைராணிப்பேட்டை:"நகராட்சி எல்லையில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும்' என்று ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், "டிஜிட்டல்' விளம்பர பேனர்கள் வைப்பது வழக்கமாகி விட்டது. ராணிப்பேட்டை நகராட்சியில் பல இடங்களில் நகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
சில சமயங்களில் அரசியல் கட்சியினர், திருவிழா நடத்துபவர்கள், திருமண வரவேற்பு, வாழ்த்து சொல்பவர்கள் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கின்றனர். இப்படி வைக்கப்படும் பேனர்கள் பல நாட்கள் அப்படியே இருக்கும். எப்போதாவது நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் இதுபோன்ற பேனர்களை அதிரடியாக அகற்றுவார்கள்.
இந்நிலையில், நகரில் நிலவும் நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் குட்டி(எ)கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இப்போதைய நகர்மன்றத்தின் ஆயுள் இன்னும் 20 மாதங்கள்தான். அதற்குள் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளது. நகராட்சி எல்லையில் குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நகரெங்கும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும்.
இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். பேனர் வைப்பவர்கள் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறுவதுடன், நகராட்சியில் இற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைத்தால் அவை அகற்றப்படுவதுடன் பேனர் வைத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும். அது யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.