தினகரன் 21.01.2010
ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகள் மீட்பு
கோவை: கோவை சொக்கம்புதூர் பகுதியில் ரோட்டில் திரிந்த மாடுகளை மிருகவதை தடுப்பு சங்கத்தினர் லாரியில் கட்டி இழுத்து வந்த கொடுமை பலரை முகம் சுளிக்க வைத்தது.
கோவை அருகே சொக்கம்புதூரில் மாடுகள் ரோட்டில் சுற்றி திரிவதாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் மிருகவதை தடுப்பு சங்கத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து சங்க ஆய்வாளர் ப்ரடெரிக் விமலன் தலைமையில் சங்க ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று 3 மாடுகளை மீட்டனர். பிடிபட்ட மாடுகளை ஒரு லாரியின் பின்புறம் கட்டி அப்படியே லாரியை ஓட்டி இழுத்து வந்தனர். சொக்கம்புதூரில் இருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான தூரம் சுமார் 10 கிலோ மீட்டர். வயதான மாடுகள் மூன்றுமே லாரியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தத்தி, தத்தி வந்ததது.
சாலையில் திரியும் கால்நடைகளை பாதுகாப்பாக மீட்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு ஏற்படும் தீங்குகளை தடுப்பதும் இச்சங்கத்தின் பிரதான பணி. குறிப்பாக அதிக பாரம் ஏற்றி மாடுகளை கொண்டு இழுப்பது, வண்டிகளில் பாரம் ஏற்றி செல்லும் போது தார்முள் குச்சிகளை கொண்டு மாடுகளின் முதுகில் குத்தப்படுகிறதா போன்றவற்றை கண்காணிக்கவேண்டியது மிருகவதை தடுப்பு சங்கத்தின் பிரதான பணி.