தினமணி 25.01.2010
கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல்: ரூ. 10 லட்சத்தில் தடுப்பு நடவடிக்கைகள்
அம்பாசமுத்திரம், ஜன.23; திருநல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைக்கு இதுவரை சுமார் ரூ. 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதத்தில் தொடங்கிய இக் காய்ச்சல் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே காய்ச்சல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 41 நாள்களுக்கு இரண்டு கொசுப் புகை அடிக்கும் இயந்திரத்துக்காக ரூ. 61,500 செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், திண்டுக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்டு 3 நாள்களுக்கு கொசுப் புகை அடிக்கப்பட்ட வகையில் ரூ. 38 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலைத் தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு இதுவரை ரூ. 2.64 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திடவும், மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களுக்காகவும் சுமார் ரூ. 2.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் பரவி வரும் காய்ச்சலுக்கான காரணத்தை அறிய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் வேதனையடைந்து வருகினறனர்.