தினமலர் 27.01.2010
அரவக்குறிச்சி மளிகை கடைகளில் எண்ணெய் வகைகள் திடீர் ஆய்வு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சிப் பகுதியிலுள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் உணவு எண்ணெய்கள் குறித்து சுகாதாரத் துறையினர திடீர் ஆய்வு நடத்தினர். கரூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதாசிவம் உத்தரவின் பேரில், பள்ளப்பட்டி, அண்ணாநகர், மலைக்கோவிலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் விற்கப்படும் உணவு எண்ணெய் வகைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, தரமானதாக உள்ளதா?, தயாரிப்பு விபரம், காலாவதி தேதி ஆகியவைகள் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், சுகாதார ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர். இதில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றில் சந்தேகப்படும் படி இருந்த, எண்ணெய்கள் மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு ஆய்வக் கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான தரமற்ற எண்ணெய் உபயோகிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆய்வின் போது காலாவதியான மூவாயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள எண்ணெய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கலப்பட எண்ணெய் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.