Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Print PDF

தினமணி 28.01.2010

பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பெங்களூர், ஜன,27: பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு வழக்கு மீதான தீர்ப்பை வியாழக்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அறிவித்தபடி பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுமா என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த

வார்டு இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்க உள்ள நிலையில், இட ஒதுக்கீடு வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டுவிடும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் தலைமை நீதிபதி பெஞ்ச் முன் பெங்களூர் மாநகராட்சி இட ஒதுக்கீடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இட ஒதுக்கீடு பிரச்னையில் பல்வேறு அம்சங்களை நீதிபதிகள் பரிசீலித்து வருவதால் தீர்ப்பை ஒரு நாள் நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

பெங்களூர் மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இட ஒதுக்கீடு வார்டு அடிப்படையில் அமைய வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு அறிவித்த இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வார்டு அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி பிப்ரவரி 21-ம் தேதி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த அப்பீல் மனுவை விசாரித்து, கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் அரசு அறிவித்த இட ஒதுக்கீடு அடிப்படையில் பெங்களூர் மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் இப்போது விசாரணையில் இருந்து வருகிறது.

Last Updated on Thursday, 28 January 2010 09:54