தினமணி 28.01.2010
மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை
மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசுவதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த உத்தரவு மதுரை மாநகராட்சியிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் செல்போனை பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.