தினமணி 29.01.2010
நகராட்சி ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கும் கோரிக்கை ஏற்பு
புதுச்சேரி, ஜன. 28: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
÷புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.விநாயகவேல் வெளியிட்ட அறிக்கை:
÷கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்திருந்தோம். இதைக் குறிப்பிட்டு நிர்வாகத்துக்குக் கடிதம் கொடுத்திருந்தோம்.
உள்ளாட்சித்துறை செயலர் நூதன்குகா பிஸ்வாஸ் எங்கள் சங்கப் பொறுப்பாளர்களுடன்
புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்குவது போன்று புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் அரசே நேரடியாக வழங்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.
÷6-வது ஊதியக் குழுவில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 30 சதத்தை அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று விரைவில் வழங்கப்படும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசு துறையில் சட்ட ஆலோசனை உத்தரவு பெற்று விரைவில் தாற்காலிக அந்தஸ்து பெற்ற ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் நிரந்தரம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு கிரேடு பே வழங்க ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி சிறப்பு அலவன்ஸ் ஆணை வழங்கப்படும். துப்புரவு தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதியைத் தளர்த்தி முன் தேதியிட்டு காலக்கட்டப் பதவி உயர்வு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நகராட்சி ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு நிர்ணயம் செய்யும் தொகையில் இடம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.