கோவை : கோவை சிங்காநல்லூர் 10வது வார்டு வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பெரியார் நகர் உள்ளது. இங்குள்ள 58 குடும்பங்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 58 குடும்பத்தினரும் இங்கு வீடு கட்டி குடியிருக்கின்றனர். இப்பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல 30 அடி ரோடு உள்ளது. ஆனால், இதை அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் ஆக்கிரமித்து விநாயகர் கோயில் கட்டினார். அவருக்கு சொந்தமான மாடுகளையும் கட்டி, மாட்டுத்தொழுவமாகவும் பயன்படுத்தி வந்தார். அரிஜன மக்கள் இப்பகுதி வழியாக காமராஜர் சாலைக்கு செல்லக் கூடாது என்பதற்காக சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 21 ஆண்டுகளாக இதேநிலைதான். இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட எட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடம் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிட மக்களை தனியாக ஒதுக்கி வைக்கும் நோக்கத்தில், மாநகராட்சி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
கமிஷனர் அன்சுல் மிஸ் ரா தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று தீண்டாமை சுவரை புல்டோசர் மூலம் இடித்தனர்.