தினகரன் 01.02.2010
பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வர் உத்தரவு
கோவை : கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பணிகள் ஆய்வு கூட்டம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, பொங்கலூர் பழனிசாமி, சாமிநாதன், ராமச்சந்திரன், கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநாடு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறுகையில், ‘ரூ.26 கோடிக்கு 71 ரோடு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும்‘ என்றார். ‘திருச்சி சாலையை 4 வழிப்பாதையாக மாற்றும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். மசக்காளிபாளையம் சாலை, ரங்கவிலாஸ் மில் சாலை உள்பட 5 சாலைகளை சீரமைக்க வேண்டும். அவிநாசி ரோடு ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் பணியை ஏப்ரலுக்குள் முடிக்கவேண்டும். மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை உரிய காலத்தில் சீரமைக்க மத்திய அரசிடம் பேசப்படும்’ என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பின்னர், வ.உ.சி பூங்கா மைதானத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை 9.5 கி.மீ தூரம் மாநாடு பேரணி நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை அவர் விசாரித்தார். பேரணி பாதை தொடர்பான வரைபடத்தை பார்வையிட்டு அவர் கூறியதாவது:
பேரணி பாதை ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகளை போலீசார் சிறப்பாக செய்யவேண்டும். 3 கி.மீ தூரம் மாநாடு ரதம், அலங்கார வாகனங்கள் செல்லும். 6.5 கி.மீ தூரம் மக்கள் ஊர்வலம் நடத்தப்படும். மக்கள் பார்வையிட வசதி, வாகனம், பாதை வசதிகள் தொடர்பாக தெளிவான விவரங்களுடன் திட்டம் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநாட்டுக்கான போக்குவரத்து, ஊர்வலப் பாதைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மாநாடு தொடர்பான பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிடப்பட்டது. பேரணிக்கு வெளிமாவட்ட வாகனங்கள் அதிகமாக வரும். அந்த வாகனங்களை நிறுத்த தேவையான பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. மாநாட்டின்போது போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்படும்’ என்றார்.