தினமலர் 04.02.2010
நகராட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் 2 பேருக்கு உதவித்தொகை உத்தரவு வழங்கல்
நாமக்கல்: நகராட்சியில் நடந்த முகாமில் கலெக்டர் சகாயம், மக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் அடங்கிய 175 மனுக்களை பெற்றார். இரண்டு பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் உள்ள மக்களின் தேவை என்ன, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைத்துள்ளதா, அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அறியவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து அதன்படி அவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நகராட்சி மக்களிடம் இருந்து மனுக்களை பெறும் முகாம் நடத்தப்படுகிறது. நாமக்கல் நகராட்சியில் நடந்த முகாமுக்கு, கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். சேர்மன் செல்வராஜ், ஆர்.டி.ஓ., ராஜன், கமிஷனர் ஆறுமுகம், தாசில்தார் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளை சேர்ந்த மக்கள் 200க்கும் மேற்பட்டோர் குவிந்து தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டர் சகாயத்திடம் வழங்கினர். அவற்றை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் கேட்டு 120 மனு, ரேஷன் கார்டு, மேற்முறையீடு கோரி 8 மனு, முதியோர் உதவித்தொகை கேட்டு 25 மனு, நகராட்சியில் குடிநீர் இணைப்பு, வரி குறைப்பு கோரி 21 மனு உள்பட 175 மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் சகாயம், குறிப்பிட்ட சில மனுக்கள் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இரண்டு பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை உடனடியாக வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவர் பூபதி, சுகாதார ஆய்வாளர் முகமது மூஷா, உள்பட பலர் பங்கேற்றனர்.