Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓசூர் பஸ்ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் 4ம் கட்டமாக 11ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை

Print PDF

தினமலர் 04.02.2010

ஓசூர் பஸ்ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் 4ம் கட்டமாக 11ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை

ஓசூர்: ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் மறு ஏலம், நான்காம் கட்டமாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி நடக்கிறது. தொழில் நகரமான ஓசூரில், பழைய பஸ்ஸ்டாண்டை இடித்துவிட்டு, அதே இடத்தில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் பத்து கோடி ரூபாயில் நவீன புது பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. நகராட்சியில் போதிய நிதிஆதாரம் இல்லாததால், புது பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணிகள் தேக்கமடைந்தது. பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணி முழுமையடையும் முன், பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் கட்டப்படும் இரு ஹோட்டல்கள், 76 கடைகளை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பஸ்ஸ்டாண்ட் இறுதிகட்டப்பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் கடந்த செப்.,25ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக ஏலம் விடப்பட்டது. நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கடைகளுக்கு அதிகப்படியாக முன்வைப்பு தொகை, வாடகை நிர்ணயம் உள்ளிட்ட காரணத்தால் வியாபாரிகள் யாரும் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதனால், ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக ஏலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஏலத்திலும் வியாபாரிகள் யாரும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஏலம் போன மூன்று கடைகள் 18 ஆயிரம் ரூபாய் முதல் 21 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் போனதால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். நவ., 11ம் தேதி மூன்றாவது முறையாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திலும், ஒரு சில கடைகள் மட்டும் ஏலம்போனது. எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் கலந்து கொள்ளாததால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதனால், கடந்த இரு மாதமாக மீண்டும் ஏலம் விடுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது நான்காம் கட்டமாக வரும் 11ம் தேதி மீண்டும் புதுபஸ்ஸ் டாண்ட் கடைகளை மறுஏலம் விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை மொத்தம் ஐந்து கடைகள் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. அதற்கு கவுன்சிலர்கள் அனுமதி அளித்துள்ளனர். மீதம் உள்ள இரு ஹோட்டல், 71 கடைகளுக்கு நான்காம் கட்டமாக ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வியாபாரிகளை முழுமையாக கலந்து கொள்ள வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏலம் முழுவதையும் போலீஸ் பாதுகாப்போடு வீடியோ எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள், வரும் 10ம் தேதி மாலை 4 மணிக்குள் முன் வைப்பு தொகையை டி.டி., மூலம் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 11ம் தேதி நேரடியாக டெண்டரில் கலந்து கொள்ள விரும்பும் வியாபாரிகள், அன்று காலை 11 மணிக்குள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டெண்டர் பாக்சில் தங்கள் முன்வைப்பு தொகை, ஏலம் கேட்கும் தொகையை மூடிய கவரில் போடுமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Last Updated on Thursday, 04 February 2010 06:22